ரகசியத் துகள்
மனித சமூக அமைப்பின் அடிப்படையையே புரட்டிப்போடும் அறிவியல் உண்மையை கண்டுபிடித்த மகத்தான நாளில் மோகன் தன் ஆராய்ச்சிகூடத்தை விட்டு வெளியே வந்த போது இரவு பதினொரு மணியைத் தாண்டி இருந்தது. மார்கழி மாத வெளிக்காற்று பட்டு சுயநினைவு வந்த பிறகுதான் தன் கையடக்கத் தொலைபேசியைத் தேடினான். அமுதா ஆறு தடவைகள் அழைத்திருந்தாள். கடைசியாக ஏறக்குறைய ஒன்பது மணி அளவில். ஏதும் அவசரம் என்றால் குறுந்தகவல் அனுப்பி இருப்பாள். நல்ல வேளையாக அப்படி ஒன்றும் இல்லை. குளிரில் தன்னை கைக்குட்டை போல சுருட்டிக்கொண்டு படுக்கிறவள் இன்னமும் விழித்திருக்க வாய்ப்பு இல்லை. மோகன் தாமதமாக வருவது அமுதாவுக்கு புதியதா என்ன? கல்யாணமாகி இரண்டாவது நாளே விடியற்காலை மூன்று மணிக்குத்தான் மோகன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். புது மனைவி வெலவெலத்து தனக்கு அரைகுறையாகத் தெரிந்து இருந்த அயலவர்கள், மோகனின் நண்பர்கள் வரை எல்லோரிடமும் விசாரித்து களேபரம் செய்து வைத்திருந்தாள். போதாதென்று ஊரிலுள்ள அவளது பொக்கைவாய் பாட்டி வேறு "புருஷன முந்தானைக்குள்ள போட்டு வைச்சுக்கோடி மா. ஆம்பிள புத்தி அலைபாயுற புத்தி" போன்ற அறக்கருத்துகளைச் சொல